செய்திகள்

2024-ஆம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர் விருது’ இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.8.2024) சுதந்திரத் திருநாளையொட்டி, சென்னை தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற தேசியக் கொடியேற்று விழாவில், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக 2024-ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதினை இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டவாறு தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

இதுகாறும் இவ்விருது திரு. சங்கரய்யா அவர்களுக்கும், திரு. ஆர். நல்லகண்ணு அவர்களுக்கும், ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வரிசையில், 2024ஆம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர் விருது’க்கு இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. அரிகிருஷ்ணன் திருமதி தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச்சு 19 ஆம் தேதியன்று பிறந்தவர்.

பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடராக விளங்கியவர்,

காங்கிரசுப் பேரியக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர்.

மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர்.

ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று
களக்காட்டிலிருந்து இராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டதன்
விளைவாக 15.08.1984 அன்று 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர்
புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் பெற்றுத் தந்தவர்.

இலக்கியச் செல்வராகவும், மேடைப் பேச்சாளராகவும் எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாக திகழ்பவர்.

1977ஆம் ஆண்டு நாகர்கோயில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்து தமிழில் பேசுவதற்குப் பலமுறை அவையில் போராடி, பத்து முறைக்கு மேல் தொடர்ந்து காவலர்களால் வெளியேற்றப்பட்டு, சோர்ந்துவிடாமல் அவரின் தொடர் முயற்சியால் 20.11.1978இல் தமிழில் பேசுவதற்கு அனுமதி கிடைத்து, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தமிழிலேயே பேசியவர்.

இதுகுறித்து முத்தமிழறிஞர் கலைஞர், “தனிமரம் தோப்பாகாது” என்ற பழமொழியை மாற்றி அமைத்து விட்டார் என்ற பாராட்டினைப் பெற்றவர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தமிழகத்தில் பனைவளம் பெருக முழங்கியவர்.

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்.

தமிழ்நாட்டில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர்.

தமிழ்நாடு அரசின்
மகாகவி பாரதியார் விருது மற்றும் பெருந்தலைவர் காமராசர் விருது பெற்றவர்.

செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தவர்.

எட்டயபுரம் கூட்டுறவு நூற்பாலைக்கு பாரதியார் பெயரிட உண்ணா நோன்பிருந்து கோரிக்கையில் வெற்றி பெற்றவர்.

பைகிராப்ட்ஸ் ரோடு என்று பெயர் கொண்டிருந்த சாலைக்கு பாரதி சாலை எனப் பெயர் வர முனைந்து வென்றவர்.

வானொலி என்பதை ஆகாஷ்வாணி என்றாக்க முனைந்தபோது எதிர்த்து சென்னையில் பேரணியும் சாத்தூர் வைப்பாற்று மணல் வெளியில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்; தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரை அழைத்து பெரிய மாநாடு நடத்தி வானொலி தொடர்ந்து நிலைக்க வழி வகுத்தவர்.

நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட போது POST- CARD; MONEY
ORDER FORM என்பனவற்றைத் தமிழில் அஞ்சலட்டை, பணவிடைத்தாள்
என்று தமிழில் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நிறைவேற்றி CHEQUE என்பது காசோலை என அழைக்கவும். தந்தியை விரைவு வரைவு என அழைத்துச் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தவர்.

நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ்.
குமரி அனந்தனின் தமிழ் அமுது.
சிந்தனைப் பண்ணையில் பாரதியார்,
சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன்,
பார் அதிரப் பாடிய பாரதி உட்பட 29 நூல்களை எழுதியுள்ளார்.

சென்னையில் உள்ள பெரும்பான்மை கல்லூரிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் சென்று சொற்பொழிவாற்றியதோடு, மாணவ, மாணவிகளுக்கும் இக்கலையில் பயிற்சி அளித்ததோடு. மாணவர்களை மேடைகளில் பேச ஆக்கமும், ஊக்கமும் அளித்த சிறப்பிக்குரியவர்.

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா

என்ற பாரதியின் வாக்கை செயல்படுத்திக் கொண்டிருப்பவர்.

இத்தகைய சிறப்புகளை தன்னகத்தே கொண்டு தமிழ் மக்கள் மனதில் தனக்கெனத் தனியிடம் பெற்ற, இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுதந்திர தின விழாவில் ‘தகைசால் தமிழர் விருது’-க்குரிய பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9